பூஜைகள்
Poojas
Poojas
ஆலயம் தோற்றம் பெற்ற காலம் முதல் பத்ததி (பத்தாசி எனவும் அழைக்கப்படுகிறது) முறையிலான பூஜைகள் நடைபெற்றதோடு வருடம் ஒருமுறை மாத்திரம் திருச்சடங்கு பூஜைகள் இடம் பெற்றன. எனினும் பிற்காலத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் பூஜைகளுடன் விசேட பூஜைகளான ஆங்கில புதுவருடப்பிறப்பு, தைப்பொங்கல், தைப் பூசம், மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, ஆவணி (விநாயகர்) சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை முதலாகியனவும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.
அன்னையினுடைய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் பத்து தினங்கள் பிரதி வருடம் தோறும் ஆடி மாதத்தில் நடைபெற்று ஆடிப் பௌர்ணமி தினத்தில் கும்பம் சொரிதல் (தீர்த்தோற்சவம்) எனும் இறுதி வழிபாடுகளோடும் அன்றிரவு ஆதி வைரவர் பூஜைகளோடும் நிறைவுபெறும். வருடாந்த உற்சவத்தில் கன்னிக்கால் வெட்டும் ஆராதனைகளும், கும்பச் சடங்கு மற்றும் தீச் சடங்கு என்பனவும் மிக விசேடமான பூஜை வழிபாடுகளாக இடம்பெறுகின்றன.
தற்காலத்தில் பிரதி ஆனி மாதந்தோறும் பூச நட்சத்திரமன்று நடைபெறும் சங்காபிடேகம் சிறப்பானதொரு வழிபாடாகும். பெண்கள் பாற்குடமெடுத்து ஊர்வலம் வந்து அன்னைக்கு பாலாபிடேகம் செய்வதும் அத்தோடு 1008 சங்குகளினால் அபிடேக ஆராதனைகள் இடம்பெறுவதும் இவ்வாலயத்தில் நடைபெறும் விசேட வழிபாடுகளுள் ஒன்றாகும்.